Breaking News

நுலை ஒளி - அச்சுப் பிரதி (A5 Layout)
நுலை ஒளி
மாணவர் இலக்கியச் சிற்றிதழ் — இதழ் 02
ஆசிரியர்: திரு. வ. துசாந்தன்
வெளியீடு: மட்/மமே/ கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம்
வெளியீட்டுத் தேதி: 2026.04.30

பொருளடக்கம்

1. ஆளுமை விருத்தியும் இன்றைய கல்வியும் (ஆசிரியர் பக்கம்) 1
2. என் கனவுப்பாதை (கவிதை) — நா. தனேச்சினி 3
3. மெழுகுவர்த்தி (சிறுகதை) — செல்வி. யோ. ஹர்ஷாஜினி 5
4. நாட்டார் பாடல்கள் (கட்டுரை) 7
5. சமூகம் எங்கே போகிறது (நாடகம்) 8
6. ஆசிரியர்களும் வகுப்பறை முகாமைத்துவமும் (கல்விச் சிந்தனை) 11
7. உடல் சுமந்து வந்த வாகனம் (சிறுகதை) 12
8. காலத்தின் கோலங்கள் (சிறுகதை) 14

இரண்டாவது இதழில்...

இரண்டாவது "நுலை ஒளி" சிற்றிதழ் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். நவீன கால ஓட்டத்தில், மாணவர்களை ஆக்க இலக்கியத்தின் பால் ஈர்ப்பதும், அவர்களைத் தொடர்ச்சியாக எழுத வைப்பதும் ஒரே நொடியில் சாத்தியமாகிவிடாது.

அவர்களின் பின்னால் நின்று நாம் தொடர் ஊக்கமளிக்க வேண்டும். இன்றைய பாடசாலைச் சூழலில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும், இந்த இரண்டாவது சிற்றிதழ் வெளியீட்டின் மூலம் அதனை நாம் நிரூபித்திருக்கின்றோம்.

இம்முயற்சிக்குச் சிறந்த ஆলোசனைகளை வழங்கியும், எம்மை ஊக்கப்படுத்தியும் வருகின்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை, தமது சிறந்த ஆக்கங்களைத் தந்துதவிய மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- வ. துசாந்தன்

ஆளுமை விருத்தியும் இன்றைய கல்வியும்

ஆசிரியர் பக்கம்

பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளை சமூகத்தில் மதிக்கத்தக்க நல்ல மனிதனாகவும், சூழலுக்கு ஏற்ப வாழக்கூடியவனாகவும் உருவாக வேண்டும் என்றே கனவு காண்கிறாள். அந்தக் கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் ஆளுமை விருத்திகளையும் வழங்குகின்ற இடமாகப் பாடசாலை அமைய வேண்டும். இதற்குப் பாடசாலைகள் காலை 7.30 முதல் மதியம் 1.30 மணி வரை இயங்கினால் மட்டும் போதாது.

அவ்வாறு இயங்கும் பாடசாலைகளால் கல்வி அறிவை வழங்குவதற்கோ அல்லது பரீட்சைக்காகப் பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களை உருவாக்குவதற்கோ தான் முடியும். இன்று அத்தகைய சூழலே பாடசாலைகளில் காணப்படுகிறது. குறிப்பாக, தேசியப் பரீட்சைகளில் சித்தி வீதத்தை அதிகமாகக் காட்டும் பாடசாலைகளே "சிறந்த பாடசாலைகள்" என்ற தவறான மனப்பதிவு மக்கள் மத்தியில் உள்ளது, இது களையப்பட வேண்டும்.

மாணவர்களின் ஆளுமை விருத்திக்காகப் பாடசாலைகள் அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும். பாட அறிவை வழங்குவதற்கு நேரசூசி ஒதுக்கப்படுவதைப் போன்றே, அதற்குச் சமமாக ஆளுமை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதன் பயனாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில்நுட்பங்களுடன் பங்களிப்பவர்கள் உருவாவார்கள். இது புதிய தொழிற்சாலைகள் உருவாவதற்கும், வேலைவாய்ப்புகள் பெருகவும் வழிவகுக்கும்.

எந்தவொரு மாணவனும் திறமையற்றவன் அல்ல. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு துறையில் திறமை மிக்கவர்களாகவே இருக்கிறார்கள். அத்திறமையை வளர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் சூழலும் இல்லையெனில், அவை ஒழுங்கடிக்கப்பட்டுவிடும். இன்று தேசியப் பரீட்சைகளில் சாதிக்காத பலரே சிறந்த செல்வந்தர்களாகவும், பலருக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழிலதிபர்களாகவும் திகழ்கிறார்கள்.

"மாணவர்களே முதன்மையானவர்கள்" எனக் குறிப்பிட்டாலும், நடைமுறையில் அவர்கள் அவ்வாறு முதன்மைப்படுத்தப்படுகிறார்களா என்பது சிந்திக்கத்தக்கது. எனவே, இருக்கின்ற வசதிகளைக் கொண்டு மாணவர்களுக்கான சிறந்த செயல்பாடுகளைத் திட்டமிடும் அதிபர்களும், அர்ப்பணிப்புடன்ச் செயல்படும் ஆசிரியர்களும் பாடசாலைகளில் உருவாக வேண்டும்.

என் கனவுப்பாதை

நா. தனேச்சினி (தரம் 10)
கண்டங்கள் ஏழிற்கும் இடையில்
கண்டதோர் காவியமாக இருந்தது என் கனவு
கால்கள் முளைத்த பறவை போல்
காற்றில் ஆடி அசைந்து பல எண்ணம்
கள்ளமெல்லா பிஞ்சு நெஞ்சதினில் ஒரு
காகித துண்டாகியது பல ஆசை
கலை எனும் மாளிகைக்குள்
காந்தமாய் ஒட்டியது என் உணர்வு

தொட்டு படித்த புத்தகங்கள் என்னை
தொலை தூரம் நடத்தி சென்றது
தொலைத்த கனவுகள் எல்லாம்
தொலைபேசியில் நாடகமாய் நடந்தது
தொழில்நுட்ப வளர்ச்சி தொன்று
தொட்டு வளர்ந்து சிரித்தது
தொப்பியின் வளைவு போல்
தோன்றியது என் கனவுப்பாதை

வேஷம் போட்ட உலகில்
வெண்மையாக வடிவெடுத்தது சில கனவு
வேணாம் என்று ஒதுக்கிய உறவுக்குள்
வெற்றியை எட்டியது என் உணர்வு
வெள்ளம்போல் ஊற்றெடுத்த பாசத்திற்குள்
வெள்ளை முல்லிபோல் மலர்ந்தது உறவுகள்
வேகமாக ஓடிய நாட்களுக்குள்
வேதனையாய் இருந்தது என் கனவு

சில்லென பெய்யும் மழையில் கண்டேன்
சிரித்து மலரும் வெற்றியை
சிக்கனமாய் சேமித்த அன்பில் பார்த்தேன்
சிதறிக் கிடந்த என் ஆசையை
சிறகிருந்த நினைவுகளோடு - நான்
சிந்தித்து பாடுகின்றேன் வாழ்க்கையை
சிற்பமாக செதுக்கிய நிலையில் கண்டேன்
சினம் கொண்ட என் மனதை

எண்ணற்ற இசைபாடி என் மனக்கானகத்தில்
எட்டிப்பார்த்த அழகிய கனவு இது
ஏங்கும் என் மனதிற்குள்
எதிர்காலத்தை நிரப்பிய கிணறு இது
எப்போதும் உறங்காமல் - தினமும்
எனக்குள் நுழைகிறது இலட்சியம் இக்கனவு
என் கண் மூடி முழுமையாக
என்னை நானே மறக்கிறேன் இக்கனவால்

பள்ளி சென்று பாடம் படிக்கும் வயதில்
பாரமாய் நினைத்தேன் என் கனவை
பாதிதூரம் நடந்து சென்ற பின்
பள்ளமாக நினைத்தேன் இலட்சியத்தை
பயந்து விலகிய என் வாழ்வதனில்
பக்குவமாய் முன்னேற்றியது என் பருவம்
பகுத்தறிவு இல்லா இளமையில்
பகுத்து விளக்கினேன் வெற்றியை
பத்திரமாய் என் கனவுக்குள்
பதித்து வைத்தேன் பதவிகளையெல்லாம்

மெழுகுவர்த்தி

செல்வி. யோ. ஹர்ஷாஜினி (தரம் 10)

கிழக்கு வெளுத்ததோ இல்லையோ காகங்களின் பூபாலம் கேட்கத் தொடங்கியது. ‘நிலவு வெளிச்சத்தைக் கண்டாலும் இந்தக் காக்கைகள் கத்தும்தானே’ எனத் தனக்குள்ளே தீர்ப்புச் சொல்லிவிட்டுப் படுத்த படுக்கையில் இருந்து எழும்பினேன். சனிக்கிழமை என்பதால் பாடசாலை இல்லை என்ற சிறு சந்தோஷத்துடன் குளிக்கச் சென்றேன். குளித்து முடித்த பின் சாப்பாட்டிற்காக அம்மாவைக் கூப்பிட்டேன். அம்மா சொன்னார் இட்லியும், சாம்பாரும் செய்து வைத்திருக்கிறேன் வந்து சாப்பிடு என்றார்.

அங்கே இட்லியும் சாம்பாரும் என்று சொல்லும் போதுதான் ஞாபகம் வருகிறது. எனக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். எங்கள் கிராமம் இந்தச் சம்பவத்தால் அப்படியே ஆடிப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான மண்ணின் மரணங்கள், மரணங்களைக் கண்டு கேட்டுப் பழகிப் போன நமது காலத்தைப் போல் அல்லாமல் எப்போதாவது நிகழ்கிற மரணங்களைப் பல நாட்கள் பேசிப் பேசி கவலைப்படுகிற காலம் அது.

அப்படி ஒரு சம்பவம்தான் இது. கண்ணகி அக்காவிற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண்ணகி என்பதே இறைவி பெயர். பெயரிலே புகழ் கொண்டவள். அழகில் அவளை எப்படி ரசித்துக்கூறுவதென்றே தெரியவில்லை. அவளின் பார்வை கதிரவனின் பொற்கதிர்கள் பட்டு இலைகளின் நடுவே இரத்தினக் கற்களாக மின்னும் பனித்துளிகள் போன்று இருக்கும். எல்லோருடனும் இப்படி இருக்க மாட்டாள். யாரைக் கண்டாலும் வெட்கப்படாமல் இருக்க மாட்டாள். அவளின் இரத்தத்திலே வெட்கம் கலந்து இருப்பது போல் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அவ்வளவு அழகு வெட்கத்திலும் ஒரு அழகிய பார்வை. இப்படி இருந்தவளுக்கு என்ன நடந்தது?

எனக்கு அவள் வீட்டிற்குச் சென்றாலே எனக்காகவே அவள் கையால் இட்லியும் சாம்பாரும் செய்து தருவாள். அதான் அம்மா செய்த இட்லியும் சாம்பாரும் கண்ட உடனே கண்ணகி அக்கா ஞாபகம் வந்தது. அக்காவிற்கு அப்போது 22 வயது இருக்கும். அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். அவளின் கணவனைச் சொல்லப் போனால் அழகிற்குத் திருஷ்டி பரிகாரம் போல் அமைந்தவர். அக்கா பூரணை நிலவென்றால் அவள் கணவன் அமாவாசை இருள் போன்றவர். எனக்குக் கண்ணகி அக்கா என்றால் அவ்வளவு பிடிக்கும். அவள் கணவனை எனக்குக் கண்ணிலே காட்டத் தேவையே இல்லை.

அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. திருமணமாகி ஆறேழு வருடங்கள் இருக்கும். அம்மா சொல்லுவார் பாவம் அவளுக்கு ஒரு புள்ளை பூச்சி இருந்தால் சந்தோஷமா இருப்பாள். நான் இப்ப சந்தோஷமா இல்லையா? என்று நான் நினைத்துக் கொள்வேன். வீட்டில் எல்லா வேலைகளையும் அவளே பொறுமையாகச் செய்வாள். அவள் கணவனுக்கு அவள் மேல் பாசம் அதிகம் என்று அம்மா சொல்லுவார். நான் நம்பமாட்டேன். கண்ணுக்குப் புலப்படாத ஒரு வேதனை குடி கொண்டிருப்பது போல் அக்காவின் முகம் மெல்லிய சோகம் சுமந்திருக்கும். அக்கா எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவாள். அம்மாவும் கதையைத் தொடர்ந்தாள்...

அக்கா இப்படி இருக்கும் போது ஒரு நாள் தமிழ்நாட்டில் இருந்து அழகு சாதனப் பொருட்கள், வளையல், மாலைகள் போன்ற பொருட்களை வியாபாரம் செய்யும் ஒருவனை வீட்டிற்கு அழைத்து வந்தாள். வியாபாரியின் பெயர் மாதவன். யாருக்கும் அவனைப் பிடிக்கவில்லை. அக்கா சொன்னாள் யார் என்று தெரியாதவனை எப்படி வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது என்றாள். கணவன் பாவம் அவன் போய் வந்தால் லாபமே இல்லை தங்கினால் லாபம் வரும் நீ சும்மா இரு அவன் இருக்கட்டும் என்றான். மாமி ஒன்றுமே பேசாமல் இருந்தாள்.

பிடிக்காவிடினும் பாவம் என்றபடியே இருந்த அக்காவின் வாழ்வில் மெல்லென்ற ஓடிக்கொண்டிருந்த நீரோடையின் குறுக்கே அணை கட்டித் திருப்பி விட்டாற்போல் சிக்கலில்லாமல் போய்க்கொண்டிருந்த அக்காவின் வாழ்வில் திருப்புமுனை. வறண்டு கிடந்த பாலைவனத்தில் சில்லென்ற மழைத் துளி போல் அக்காவின் வாழ்வில் மாற்றம். அம்மா சொல்வது போல் பிள்ளை பூச்சி ஒன்று அக்காவின் வயிற்றில் உருவானது. இதை அம்மா என்னிடம் சொன்னாள். எனக்கு ஒரே குதூகலம் ஆனால் அக்காவிற்குச் சந்தோஷமில்லை என்பது எனக்குத் தெரிந்தது.

இப்படியே ஆறேழு மாதம் கடந்து போனது. அந்தச் சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அக்கா அம்மாவிடம் பேசி அழுது முகம் வீங்கியபடியே இருந்தாள். என்னம்மா நடந்தது? ஒன்றுமில்லை நீ போய் விளையாடு என்றார். அன்று அக்காவிற்குப் கடுமையாக இயலாமல் இருந்தது. அவள் வீட்டில் பெரிய கிணறு. அதில்தான் தண்ணீர் அள்ள வேண்டும். அக்காவின் கணவன் வேலைக்குச் சென்று விட்டான். நித்திரை விட்டெழுந்த அக்கா தண்ணீர் அள்ளுவதற்காக முட்டியை எடுத்துக் கிணற்றடிக்குச் சென்றவள் கால் தவறி விழுந்து விட்டாள்.

வேலை விட்டு வந்த அக்காவின் கணவன் "கண்ணகி என்ன செய்கிறாய்" என்றான். பதில் கிடைக்கவில்லை. வீடு முழுவதும் தேடிய பின்னர் 'கண்ணகி கண்ணகி' என்று கூவிக்கொண்டே கிணற்றடியைப் பார்த்தான். முட்டி இருப்பதப் பார்த்து அவனின் மனம் நடுங்கியது. உள்ளே போவதா இல்லையா போவோம் என்ற படியே கிணற்றை எட்டிப் பார்த்தான். என்ன சொல்வது, கண்ணகி அக்கா பிள்ளை வயிற்றுடன் கிணற்றினுள் மிதப்பதைக் கண்ட கணவன் மனம் உடைந்து அந்த நொடியே இறந்து விட்டான்.

எல்லா ஜனங்களும் வந்த பிறகு எல்லா காரியங்களும் ஆன பிறகு அக்காவை அடக்கம் செய்தார்கள். வெளியில் சொல்ல முடியாத விஷயம் ஒன்று அம்மாவை உறுத்தியது. தமிழ்நாட்டு வியாபாரி மாதவன் அக்காவின் இறப்பிற்குப் பின்னர் ஊருக்கே வருவதேயில்லை. என்ன நடந்தாலும் அக்காவிற்குள்ளேயே என்னவோ இருக்கிறது என்ற தெளிவில்லாத மனமே உருகியது.

நாட்டார் பாடல்கள்

கட்டுரை ஆக்கம்

கூட்டமாக இணைந்துதான் பாடுவார்கள். நாட்டுப்புற மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் தமது வேலையைச் செய்வர். காரணம் அவர்கள் இப்பாடலை பாடி தமது களைப்பை மறந்து வேலை செய்வர். இதனால் அவர்களது வேலையும் விரைவில் முடியும். நாட்டார் பாடல்கள் மீண்டும் மீண்டும் பாடத் தூண்டுபவை. அப்பாடல்கள் மனதில் நிம்மதி, மகிழ்ச்சி தருபவை. சோகம், களைப்பு போன்றவற்றை மறக்கச் செய்பவை.

இப்பாடல் அதிகமாக மலையக மக்களினாலே பாடப்பட்டுள்ளது. அதாவது கண்டி மக்கள் தாம் இலங்கைக்கு வந்த அனுபவங்கள், அவர்களின் சொந்த இடம் மற்றும் அவர்கள் கண்டியில் வாழ்ந்த அனுபவங்கள், தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் போது எழும் உணர்வுகள் ஆகியவற்றை இப்பாடல்கள் அழகாக வெளிப்படுத்துகின்றன.

சமூகம் எங்கே போகிறது?

சமூக விழிப்புணர்வு நாடகம்
காட்சி - 01
பாத்திரங்கள்: விமல், சீதா, ராஜா, வயாஸ், திலக்ஸ் | இடம்: விமலின் வீடு
(விமல் வேலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறான். சீதா சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருக்கிறாள். ராஜா கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்பிற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறான்.)
சீதா:
(சமைத்த உணவுகள் கைதவறி தனது காலில் கொட்ட, வலி தாங்க முடியாமல்) ஐயோ முருகா... எரியுதே எரியுதே... என்னால தாங்கவே முடியல... நான் என்ன செய்ய அப்பா....
विமல்:
(சமையலறைப் பாத்திரம் விழுந்த சத்தத்தைக் கேட்டுப் பதற்றத்துடன்) சீதா என்ன சத்தம்? என்ன ஆச்சு?
சீதா:
(தரையில் விழுந்தவாறு) இஞ்ச கொஞ்சம் வாங்களேன்.
விமல்:
(சமையலறையை நோக்கி ஓடிச் சென்று சீதாவைப் பார்த்து கண் கலங்கி) ஐயோ சீதா என்னாச்சு? எப்படி நீ விழுந்த? எழும்பு எழும்பு... (சீதாவின் கையைப் பிடித்து...)

ராஜா:
அம்மா, ஏன் கத்துறீங்க? என்னாச்சு?
சீதா:
(கோபமாக) உனக்கு எத்தனை தடவை சொல்றது? அந்த திலக்ஸோடும் வயாஸோடும் சேர வேண்டாம் என்று. உனக்கு விளங்கவில்லையா?
ராஜா:
ஏன் அம்மா? அவங்க என்ன செஞ்சாங்க? ஏன் அவங்கள கண்டாலே உங்களுக்குப் பிடிக்காது? அவங்க ரொம்ப நல்ல பசங்கம்மா.
சீதா:
எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் சொன்னத மட்டும் செய். போறந்தா தனியா போ, இல்லண்டா வேறு பிரண்ட்ஸோட போ. இது தான் என் முடிவு. உனக்கு புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான் சொல்லுவேன். (கோபத்துடன்).
விமல்:
என்ன சீதா நீ கதைக்கிற கதை? (கோபமாக).
சீதா:
இஞ்சபாருங்க நீங்க இதுக்கு நடுவுல வரத்தேவை இல்லை. (கோபத்துடன்).
ராஜா:
அம்மா அப்பாவ ஒன்னும் சொல்லாதீங்க... ஏன் என்னை போக வேண்டாம் என்று சொல்றீங்க? அத முதல்ல சொல்லுங்க. அவங்க என் பிரண்ட்ஸ் அம்மா...
காட்சி - 02
பாத்திரங்கள்: ராஜா, வயாஸ், திலக்ஸ் | இடம்: டியூஷன் முடிந்து வரும் வழி
(மூவரும் உரையாடியவாறு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு சிவன் கோயிலைக் காண்கின்றனர்.)
ராஜா:
டேய் கொஞ்சம் நில்லுங்கடா, நான் கொஞ்சம் கோயிலுக்குப் போயிட்டு வாரேன். கொஞ்சம் (தன் ஆள்காட்டி விரலை நீட்டி) அந்த கடைக்குக் கிட்ட போய் நில்லுங்கடா...
வயாஸ்:
ஏண்டா... நீ மட்டும் போப்போறியா?
திலக்ஸ்:
ஏன் நாங்களெல்லாம் உன்னோட வரக்கூடாதாடா?
ராஜா:
(வியப்பாக) இல்லடா... நீங்க... என்னோட... கோயிலுக்கு?
திலக்ஸ்:
ம்... சரியாகப்போச்சு ராஜா என்ன நினைக்கிறான் என்று எனக்குத் தெரியும்... நாங்க ரெண்டு பேரும்... கிறிஸ்தவம், முஸ்லிம் என்று மதம் வேறையாக இருந்தும் உன்னோட இந்து கோயிலுக்கு வரப்போறோம் என்று சொன்னதால் தானே ராஜா நீ இப்படி கதைக்கிறாய்... எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு.
வயாஸ்:
ஐயோ வாப்பா... ஏன் இப்படி யோசிக்கிறாய், நாங்க எல்லாரும் நண்பர்கள் தானேடா!

(மூவரும் கோயிலை விட்டுச் செல்ல ஆயத்தமாகின்றனர்.)
ராஜா:
சரி ஐயா அப்ப நாங்க கிளம்புறோம். (ஆலய குரு உடனே ராஜாவைத் தடுத்து)
ஆலய குரு:
ராஜா கொஞ்சம் நில்லுப்பா. நாளைக்கு உன் பிறந்த நாள் தானப்பா?
ராஜா:
ஆமாங்கையா உங்களுக்கு எப்படித் தெரியும்? (வியப்போடு).
ஆலய குரு:
எனக்கு எப்படியோ தெரியும். நீ மறந்துராம உன் அம்மாவையும் அப்பாவையும் நாளைக்கு கோயிலுக்கு வரச்சொல்லுப்பா.
ராஜா:
ஓம் ஐயா கண்டிப்பாக வரச் சொல்றேன். வருஷ வருஷம் என் பிறந்தநாளுக்கு வாரவங்கதான்... நான் மறக்க மாட்டேன். சரி ஐயா.. போயிட்டு வாரேன்.
ஆலய குரு:
ஓம் அப்பா பார்த்துப் போயிட்டு வாங்கோ.

(மூன்று நபரும் வீதிக்கு வந்து நடக்கத் தொடங்குகின்றனர்.)
திலக்ஸ்:
(தன்னுடைய வீடு நெருங்கியதும்) சரிடா நான் போயிட்டு வாரேன். ராஜா நாளைக்கு கண்டிப்பாக எனக்கு ட்ரீட் வைக்கணும். (என்று சொல்லி வீட்டிற்குள் நுழைகிறான்).
வயாஸ்:
(தன்னுடைய தெரு வந்ததும் விடைபெறுகிறான்).
காட்சி - 03 (உண்மை வெளிப்படுதல்)
(மறுநாள் ஆலயத்தில் குருக்கள் விமல், சீதா மற்றும் ராஜாவிடம் பேசுகிறார்)
ஆலய குரு:
விமல், சீதா... அன்னைக்கு ஒரு பெருமழையில் சீதா பிரசவ வலியில் போராடினாள். அந்த இரவு, உங்கள் குழந்தையோ இறந்து பிறந்தது. அதை எண்ணி நீங்கள் அழுத போது, இந்த ஆலயத்தில் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது, தன் தாய் தந்தையை இழந்த ஒரு அநாதைக் குழந்தை அழுதுகொண்டிருந்தது. அந்த குழந்தையைத்தான் நீங்கள் உங்கள் சொந்தக் குழந்தையாக வளர்த்தீர்கள். அவன் தான் இந்த ராஜா!
சீதா:
(அதிர்ச்சியிலும் கண்ணீரிலும் உறைகிறாள்).
ஆலய குரு:
சாதி, மதம், இனம் அனைத்தும் மனிதன் வகுத்தது. இந்த பிள்ளைகள் காட்டும் உண்மையான நட்புக்கு முன்னால் மத வேறுபாடுகள் அர்த்தமற்றவை. இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

ஆசிரியர்களும் வகுப்பறை முகாமைத்துவமும்

கல்விச் சிந்தனை

வகுப்பறையில் ஆசிரியரும் சிறந்ததொரு முகாமைத்துவையாளராகத் தன்னை நிறுவிக் கொண்டு செயற்படுவது ஆரோக்கியமானது. இதேபோலவே வகுப்பறையிலுள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே நடத்தையில் இருக்கமாட்டார்கள். ஆதலால் மாணவர்களின் நடத்தைகளில் கவனம் செலுத்துவது அவருக்கு வகுப்பறை கற்பித்தல் செயற்பாட்டிற்கு மேலும் வலுசேர்க்கும்.

தனி நபர்களை இனங்காணுதல், குழுக்களை இனம் காணுதல், விசேட தேவையுடைய பிள்ளைகளை இனம் காணுதல், அத்தோடு வகுப்பாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்களோடு சுமுகமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் வேண்டும். பாடத்துறை சார்ந்த, சாராத நிபுணத்துவ ஆசிரியர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுதல், கற்றல் மேம்பாடு, கற்றல் இடர்பாடுகளை இனங்காணல், கற்றலுக்கான சூழலை மாற்றியமைத்தல், மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், அன்பான மரியாதை கலந்த வார்த்தைப் பிரயோகங்கள் கற்றலை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாகும்.

உடல் சுமந்து வந்த வாகனம்

ஒவ்வொரு நாளும் இதே பாதையில்தானே நாயாக அலைந்து திரியுறேன்!" என்று சத்தமிட்டாள். விமலா திகைத்துப் போனாள். "ஏன் இவளுக்கு இவ்வளவு கோபம்? நான் என்ன தப்பாகக் கேட்டுவிட்டேன்?" என்று நினைபடி மௌனமாக நகர்ந்தாள். கமலாவின் மனதில் இருந்த விரக்தியும், உச்சி வெயிலும் அவளை இப்படிப் பேச வைத்திருந்தது. சிறிது தூரம் சென்றதும் கமலாவின் கோபம் தணிந்தது. "மன்னிக்கணும் பிள்ளை, தெரியாமப் பேசிட்டேன். எனக்கு 66 வயசாவுது. என்னாலயும் எவ்வளவு தூரம்தான் நடக்கிறது? சாகுறதுக்குள்ள இந்த வறுமை மாறுமா..." என்று வருந்தினாள்.

அழுக்குக் கறைகள்தான் அவளது முகத்தைக் கறுப்பாகக் காட்டியது. அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு அடுப்பங்கரையைப் பார்த்தாள். சட்டிப் பானைகள் அனைத்தும் கவிழ்ந்து கிடந்தன. மாலையில் மகள் மாலா ஒரு பையுடன் வந்தாள். "அம்மா, காரியம் முடிஞ்சுதா?" என்று ஏக்கத்துடன் கேட்டாள். "ஒன்றும் முடியல, நாளைக்கும் போகணும்" என்றாள் கமலா விரக்தியுடன். "இதோ, ஒரு வீட்டில் மாவு இடித்துக் கொடுத்ததுக்குக் கொஞ்சம் அரிசியும், அவங்க பிள்ளைங்க உடுத்திட்டுப் போட்ட பழைய உடுப்பும் தந்தாங்க" என்று மாலா அரிசியைக் காட்டினாள். காலையிலிருந்து மாலை வரை உழைத்த கூலி அதுதான். பேத்தியை எழுப்பி "இந்தா புது உடுப்பு" என்று மாலா உடுத்தப் போனபோதுதான் உறைந்தது — பிள்ளையின் உடல் அனலாகக் கொதிக்கிறது. "அம்மா, பிள்ளைக்குக் காய்ச்சல் அடிக்குது, பாக்கலையா நீங்க?" என்று பதறிய மாலா அரிசியை அடுப்பில் இடப் போனாள்.

மகிழ்ச்சியுடன் ஒரு வாரம் கழித்துச் சென்ற கமலாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. "என்னம்மா கேக்குறீங்க? ஓ... அந்த விஷயமா? ஸாரி அம்மா, மறந்துட்டேன். ஆனா ஒரு பிரச்சினை, உங்க ஊர் ஜி.எஸ். (கிராம சேவகர்) கிட்டயும் பிரதேச செயலாளர்கிட்டயும் சைன் வாங்கிட்டு வாங்க" என்றார் அதிகாரி. அவர் 'மறந்துட்டேன்' என்று சொன்னது கமலாவின் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது. பசியோடு காத்திருந்து எல்லா அதிகாரிகளிடமும் கையெழுத்து வாங்கினாள். மீண்டும் அலுவலகம் சென்றாள். "எல்லாம் சரிதானே ஐயா?" என்று கேட்டபோது, "சரிம்மா, ஆனா ஒருமுறை உங்க வீட்டைப் பார்க்கணும். அதுக்குப்பிறகுதான் உதவித்தொகை கொடுக்க முடியும்" என்று பதில் வந்தது. கமலாவின் உள்ளம் உடைந்தது. "இப்படியே ஒவ்வொன்றைச் சொல்லி காலம் கடத்துவார்களே..." என்று கண்ணீர் விட்டாள்.

காலத்தின் கோலங்கள்

கமலன் தனது கல்வியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டான். தனது கல்வியைத் தனது கண்கள் போல நினைத்துப் படித்தான். கமலன் பாடசாலை விட்டு வந்ததும் தனது தாயுடன் வேலைக்குச் செல்வான். பின் அவன் வீட்டிற்கு வந்து தனது படிப்பைப் பார்ப்பான். தனது தாயுடன் வேலைக்குச் சென்றாலும் அந்த வேலையை முடித்து விட்டு கற்றல் செயற்பாட்டில் ஆர்வம் காட்டினான். அவனது வீட்டில் மின்சாரம் இல்லை. அதை அவன் ஒரு குறையாக எடுத்துக் கொள்ளாமல் வசதி இல்லாவிட்டாலும் வைராக்கியம் இருந்தால் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கையோடு குப்பி விளக்கின் ஒளியில் படித்தான்.

அனைவரும் கமலன் கெட்டிக்காரன், தங்கமான பையன் என்று சொல்ல, அவன் தவறு பண்ணவே பயப்பட்டான். ஒருநாள் மார்க் குறைந்ததால் ஆசிரியர் "என்ன கமல், நீயும் இப்படியா?" என்று கேட்க அவமானமாக இருந்தது. வீட்டில் அம்மாவின் முகம் வாட ஆரம்பித்தது. இந்த கவலைகளை மறக்க சுரேஷ் நீட்டிய சிகரெட்டை வாங்கி குடித்தான். முதலில் இருமல் வந்தது ஆனால் தலையில் இருந்த கவலை மறந்து நிம்மதி கிடைத்தது. இதுதான் முதல் வலை. ஆரம்பத்தில் குறைவாக இருந்த இந்த பழக்கம் நாள் போகப் போக அதிகமாகியது.

புகைப்பழக்கம் அவனது காற்றில் கரைந்தது. கமல்க்கு அப்போது போதை தலைக்கேறி கட்டிலில் கிடந்தான். "இப்போது என்னால் முடியாது, நாளை பார்ப்போம்" என்று திரும்பிப் படுத்துவிட்டான். விடியற்காலை வீடு வெறுமையாக இருந்தது. அம்மா அசையவில்லை, உடம்பு சில்லென்று ஆகிவிட்டது. கமலனுக்குப் போதை தெளிந்தது ஆனால் வாழ்க்கை இருண்டுவிட்டது. ஊரே தூற்றிப் பேசியது. பொதுமக்களே காசு போட்டு அடக்கம் பண்ணினார்கள். அவனைக் தொடக்கூட விடவில்லை, 'கொலைகாரன்' என்று பெயர் வைத்தார்கள்.

நண்பர்கள் கமலனின் கையில் காசு இருக்கும் வரைக்கும்தான் கூட இருந்தார்கள். காசு முடிந்ததும் காணாமல் போய்விட்டார்கள். தெருவில் பார்த்தால் தெரியாத மாதிரி போவார்கள். ஒரு நாள் இரவு மழைக்குள் பஸ் ஸ்டாண்டில் கமலன் கிழிந்த சட்டையோடு நடுங்கிக் கொண்டிருந்தான். எதிரில் ஒரு டீக்கடை கண்ணாடிக்குள் அவனது முகம் தெரிந்தது. அடையாளம் தெரியவில்லை, முடி வளர்ந்து காடு போல் கிடந்தது. 19 வயதில் 90 வயது கிழவன் மாதிரி இருந்தான். டீக்கடை ரேடியோவில் ஒரு பாட்டு ஓடியது... "அம்மா என்றழைக்காத..." என அவனது கண்ணீர் mழையோடு கரைந்தது.

No comments